செவ்வாய், 7 ஏப்ரல், 2015



கர்ப்ப காலத்தில் பெண்கள் மீன் சாப்பிடலாமா?
மீனில் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் மற்றும் புரச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. கர்ப்பமாக இருக்கும் போது அவைகள் உங்களுக்கும் உங்களின் வயிற்றில் இருக்கும் சிசுவிற்கும் பல நன்மைகளை அளிக்கும். 

ஆனால் வயிற்றில் உள்ள உங்கள் சிசுவிற்கு எந்த ஒரு பாதிப்புள் ஏற்படாமல் இருக்க, கடல் உணவுகளை உண்ணும் போது நீங்கள் கூடுதல் கவனத்தை மேற்கொள்ள வேண்டும். சில கடல்வாழ் மீன்களில் பாதரசத்தின் தடயங்கள் இருக்கும்.

இது வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சிக்கு பல ஆபத்துக்களை உண்டு பண்ணலாம்.

மீனை நன்றாக சமைத்தாலும் கூட இது அப்படியே தான் இருக்கும். கர்ப்ப காலத்தில் கூடுதல் அளவிலான பாதரசத்தை உட்கொண்டால், சிசுவின் மூளை மற்றும் மத்திய நரம்பியல் அமைப்பின் வளர்ச்சியை இது வெகுவாக பாதிக்கும். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீன்கள் உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் வாரம் ஒரு முறை என மாற்றிக் கொள்ளுங்கள்.

நீங்கள் உண்ணும் மீன் பச்சையாக இல்லாமல் நன்றாக சமைக்கப்பட்டிருக்க வேண்டும். சரியாக சமைக்கப்படாத மீனால், கர்ப்பிணி பெண்களுக்கு ஒட்டுண்ணி அல்லது பாக்டீரியா நோய்கள் தாக்கக்கூடும். இது அப்படியே சிசுவிற்கு பரவும். அதனால் எதிர்பாரா விளைவுகள் ஏற்படலாம்.

வாளை மீன், காணாங்கெளுத்தி மீன் மற்றும் சுறாமீன் போன்ற பெரிய கடல் மீன்களை தவிர்த்து விடுவது நல்லது. மாறாக உள்ளூர் குளத்தில் கிடைக்கும் கட்லா மீன், உல்ல மீன் மற்றும் கண்ணாடி கெண்டை மீன் போன்ற மீன்களை உண்ணலாம்.

டப்பாவில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட மீன்களில் பதப்பொருட்கள் அதிகமாக இருப்பதால் அவைகளை தவிர்த்து விடுவது நல்லது.
தாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்:
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். தாய் பாதுகாப்பாக இருந்தால் தானே வயிற்றில் உள்ள சிசுவும் பாதுகாப்பாக இருக்கும். ஆரோக்கியமற்ற உணவுகள் தாய் மற்றும் கருவில் இருக்கு சிசு என இருவருக்குமே நல்லதல்ல. உங்கள் வயிற்றில் உள்ள குழந்தை பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் தவிர்க்க வேண்டிய விஷயங்களை பார்க்கலாம். 

• காப்ஃபைன் அளவு அதிகமாக உள்ள பானங்களான சோடா, கோலா போன்றவைகளை தவிர்க்கவும். கர்ப்ப காலத்தின் போது அளவுக்கு அதிகமாக காப்ஃபைனை உட்கொள்வது, குறிப்பாக முதல் மூன்று மாதங்களில், கருச்சிதைவுகள் ஏற்படுத்தும். அல்லது பிற உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொடர்ச்சியாக காப்ஃபைனை உட்கொள்ளும் போது, குறைவான அளவு மற்றும் எடையுடன் பிறத்தல், குறைப்பிரசவம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும் என ஆய்வுகள் கூறுகிறது. இதனால் பல வித சிக்கல்கள் உண்டாகும். 

• பச்சையான, சமைக்கப்படாத உணவுகளான பச்சை முட்டைகள், இறைச்சிகள் மற்றும் மீன் போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது. பச்சையான, சமைக்கப்படாத கடல் உணவுகள் தாய்க்கு சில தொற்றுக்களை ஏற்படுத்தும். பச்சை முட்டைகள் அல்லது இறைச்சிகளை உட்கொண்டாலும் கூட கர்ப்பிணி பெண்ணுக்கு குறிப்பிட்ட சில ஒட்டுண்ணி நோய்கள் உண்டாகலாம். ஒரு வேளை, கர்ப்பிணி பெண்ணுக்கு இவ்வகையான உணவுகளினால் தொற்று அல்லது நோய் ஏற்பட்டால், அது தொப்புள் கொடி வழியாக குழந்தையையும் அடையலாம். இதனால் குறைப்பிரசவம் ஏற்படக் கூடும் அல்லது மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தையாக பிறக்க கூடும். 

• கர்ப்ப காலத்தின் போது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் போது, பச்சை உணவுகள், பதப்படுத்தப்படாத பால் மற்றும் சீஸ் போன்றவற்றால் இந்த பிரச்சனை ஏற்படும். பதப்படுத்தப்படாத சீஸ் அல்லது பாலில் பாக்டீரியாக்கள் இருக்கலாம். இது தொப்புள் கொடி வழியாக சிசுவை அடைந்து, கருச்சிதைவை தூண்டலாம். பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், நீங்கள் வாங்கும் பால் மற்றும் சீஸின் லேபிளை நன்றாக படிக்கவும். பால் மற்றும் சீஸ் பதப்படுத்தப்பட்டு கர்ப்பிணி பெண்கள் உண்ணும் நிலையில் உள்ளது என்பதை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என FDA கட்டாயப்படுத்தியுள்ளது. பதப்படுத்தப்பட்ட விவரம் இல்லை என்றால் அதனை உடனே தவிர்த்து விடவும். 

• கர்ப்பிணிகள் தாங்கள் குடிக்கும் தண்ணீர் மற்றும் உணவின் மீது பாதுகாப்பாக இருக்க வேண்டும். தெருவோரம் கிடைக்கும் உணவுகளை உண்ணுவதால் தொற்றுக்கள் ஏற்படலாம். மேலும் கர்ப்ப காலத்தில், பெண்ணின் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாக இருக்கும். இதனால் மற்ற நேரங்களை காட்டிலும் இந்நேரத்தில் எளிதில் தொற்றுக்களுக்கு ஆளாகலாம்.
தாய், சேய் ஆரோக்கியத்திற்கு உதவும் மூச்சுப்பயிற்சி:
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சீரான அளவில் மூச்சு விடுவது முக்கியம். கர்ப்பிணிகளின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு தேவையான அளவுக்கு ஆக்ஸிஜன் கிடைக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மூச்சுப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் குழந்தை தாய் ஆரோக்கியம் காக்கப்படும். 4 எளிதான மூச்சுப் பயிற்சிகளை இப்போது பார்க்கலாம்.

• விரிப்பில் கால்களை மடக்கி வசதியாக உட்கார்ந்து கொண்டு, தாடை, தோள்கள் மற்றும் இடுப்பை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். பின் உங்கள் கையை வயிற்றில் வைத்துக் கொண்டு, மறு கையையும் அதன் மேல் வைத்துக் கொள்ளுங்கள். இதையடுத்து, அடி வயிற்றிலிருந்து மூச்சை இழுங்கள். 

அந்த நிலையில் வயிறு முழுவதும் மூச்சு பரவும் வகையில் 1, 2, 3... என்று 8 வரை எண்ணுங்கள். பின் மெதுவாக மூச்சை வெளியே விடுங்கள். இதே முறையை மீண்டும் மீண்டும் செய்யுங்கள். இந்த மூச்சுப் பயிற்சியைக் கர்ப்பிணிகள் தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது செய்ய வேண்டும். 

• பாதங்களை இணையாக வைத்துக் கொண்டு நேராக நிற்கவும். வாயை மூடிக் கொண்டு, மூச்சை நன்றாக இழுத்து 10 வரை எண்ணவும். அப்போது கைகளை மார்பில் வைத்துக் கொள்ளுங்கள் (அழுத்தக் கூடாது). நுரையீரல் விரிவடைவதை உங்களால் உணர முடியும். 

அப்புறம், ஓரிரு நொடிகள் மூச்சை அப்படியே பிடித்துக் கொண்டிருந்து விட்டு, மெதுவாக மூச்சை வெளியே விட்டு, 10 வரை எண்ணவும். இதேபோல் இந்தப் பயிற்சியை 10 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 7வது மாதத்திற்குப் பின் இந்தப் பயிற்சியைச் செய்வது சிரமமாக இருந்தாலும், முடிந்த வரை தொடர்ந்து செய்து வர வேண்டும். 

• மல்லாக்க கீழே படுத்துக் கொண்டு, வாயை நன்றாகத் திறந்து மூச்சை வேகமாக இழுத்து விழுங்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்தால் நுரையீரல்களுக்கு நல்லது. தினமும் ஒரு 5 நிமிடங்கள் இந்தப் பயிற்சியைச் செய்தால் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும். கருவில் உள்ள குழந்தைக்கும் ஆக்ஸிஜன் சீராகப் போகும். 

• உடலை நன்றாக ரிலாக்ஸ் செய்து கொண்டு, மூச்சை நன்றாக இழுத்து நிறுத்தவும். ஓரிரு நொடிகள் கழித்து, அதேபோல் உட்கொண்ட காற்றை மெதுவாக வெளியேற்றவும். பின் வாயைத் திறந்து, காற்றை இழுத்து விழுங்கி, 5 வரை எண்ணவும். 

பின் வாயை மூடிக் கொண்டு ஆழமாக மூச்சை இழுத்து விட வேண்டும். ஒரே நேரத்தில் 5 முறை இந்தப் பயிற்சியைச் செய்யலாம். இந்த பயிற்சியை நின்று கொண்டே செய்யலாம்; அல்லது வசதியாக உட்கார்ந்து கொண்டும் செய்யலாம்.
ஆழ்ந்த உறக்கம் கரு வளர்ச்சிக்கு அவசியம்:
கர்ப்பிணிகளுக்கு ஓய்வு அவசியம். அவர்கள் உறங்கும் போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அது தாய்க்கும், சேய்க்கும் பாதுகாப்பானது. கர்ப்ப காலத்தில் பெண்கள் குறைந்த பட்சம் 8 மணி நேரம் உறங்குவது கருவின் வளர்ச்சிக்கு அவசியமானது என மகப்பேறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.